Tuesday, November 13, 2007

“மறைந்து கிடக்கும் இசை பற்றிய காதல்”

மிக மெளனமாய் உன்னை ஆராய்திருக்கிறேன்
ஒரு கோடி மழைத்துளிகள் இணைத்து

உன் உருவத்தினை நான் செய்த போதும்

அதனையும் தாண்டி நீ வேறு உருவமானாய்.


என்னைக் கட்டிப்போட்டுவிட்ட உன் வார்த்தைகளும்
அதனை மிஞ்சிய பார்வைகளும்

உன் மெளனமான பொழுதுகளில்

என் உயிரினைக் குடித்துவிடுகிறது.

காமம் ஒருசொட்டும் கலக்காத இந்த காதல்

இன்றென்னை துரத்தித் துரத்திக் கொல்கிறது.

என்னைவிட
நானுன்னை நேசித்த அனைத்துப் பொழுதுகளும்

வெறிச்சோடி தூர்ந்து போய்க்கிடக்கிறது.


நீ இன்றென்னைப் பார்ககவுமில்லை,
மன்னிக்கவும்

உன்னைப்பார்க்க என்னால் இயலவில்லை.


ஏதேதோ கேட்டாய் இன்றென் முன்
பிதற்றல்கள் நிறைந்த என் பதில்களும்

உன் கண் பார்க்காத என் பார்வையும்

உனக்கு அச்சத்தினை தந்திருக்கும்.

உன்னிடம் பொய் சொன்ன முதல் நாளின்று.


இன்று நீ இழந்து நிற்பவைகளை விட
நான் இழந்து நிற்பவைகளேயதிகம்.
உன்னைக்காண வரவே கூடாதென்கிறேன்.


என் இரவுகளில் துணையிருக்கும்
கடலின் மீது வழியமைத்து

இறைச்சலடங்கிய அதன் நடுவில் நான்

தனித்து விடப்பட வேண்டும்.

நிறுத்தப்பட்ட கடிகாரமாய் இருந்துவிட
என் மனம் ஆசைப்படுகிறது.
நினைப்புக்கள் எதுவும் தேவையில்லை,

நீயழைக்காத பொழுதின் துன்பம் இனியும் வேண்டாம்.


இயங்க முடியவில்லை
நிறுத்தப்பட முடியவில்லை.

03.11.2007

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..